புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற 29 மாடுபிடி வீரர்கள் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில், வாடிவாசலில் இருந்து 124 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் துள்ளிவந்த காளைகளை அடக்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கு போட்டி ஏர்பாட்டாளர்கள் சார்பில் பரிசு வழங்கப்பட்டன.
அதேபோல, அடக்க முடியாத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாங்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முருகேசன் (29), பாத்தம்பட்டியைச் சேர்ந்தமுருகேசன் மகன் பாலாஜி(27), தேத்தாம்பட்டியைச் சேர்ந்த க. கலியமூர்த்தி(38) உள்ளிட்ட 29 பேர் காயம் அடைந்தனர். போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பாதுபாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸார் மேற்கொண்டனர்.