உலக அமைதிக்கு ஒரே தீர்வு யோகா: பிரதமர் மோடி

உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை ஆதியோகி சிவன் சிலையைத் திறந்துவைத்துப் பேசுகிறார் பிரதமர் மோடி. (இடது) திறந்துவைக்கப்பட்ட ஆதியோகி சிவன் சிலை.
கோவை ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை ஆதியோகி சிவன் சிலையைத் திறந்துவைத்துப் பேசுகிறார் பிரதமர் மோடி. (இடது) திறந்துவைக்கப்பட்ட ஆதியோகி சிவன் சிலை.

உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், 112 அடி உயர ஆதியோகி - சிவன் திருமுகத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவில் பல விழாக்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி மட்டுமே மிகப் பெரிய விழா. தேவர்கள் பலர் இருந்தாலும் மகா தேவர் என்பவர் ஒருவரே. அதைப் போலவே, மந்திரங்கள் பல இருந்தாலும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ஒன்றேதான் உள்ளது.
சிவனைக் குறிப்பதான மகா சிவராத்திரி, இருளையும் அநீதியையும் போக்கக் கூடியது. இந்நாளில் இரவு முழுவதும் சிவனைக் கொண்டாடும்போது அநீதிகளை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை நமக்கு கிடைக்கிறது.
காசியில் இருந்து கோவை வரை எங்கும் சிவன் நிறைந்துள்ளார். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே மகா சிவராத்திரியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாபெரும் கடலில் ஒரு துளியாக நாம் இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற பக்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால், பரம்பொருள் எப்போதும் போலவே இப்போதும் மாறாமல் உள்ளது.
இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காப்பதே சிவனுடைய பாரம்பரியமாகும். பறவையும், மரங்களையும், விலங்குகளையும் இறைவனாக வணங்கும் முறையை நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். "ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி' (உண்மை ஒன்றுதான், அதை அறிஞர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்) என்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
உலகம் முழுவதிலும் பல நாடுகளில், பல மொழிகளைப் பேசக் கூடிய ஞானிகள் பிறந்துள்ளனர். அவர்கள் இடத்தாலும், மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றுதான். அவர்கள் அனைவரும் கற்பிப்பது மனிதத்தை மட்டுமே.
யோகக் கலை என்பது உலகத்துக்கு நாம் கொடுத்த நன்கொடையாகும். யோகா பல பரிணாமங்களைக் கடந்து வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு யோகப் பயிற்சி முக்கியமானது. உடலை வளைத்து அசைத்து செய்வது மட்டுமே யோகா அல்ல. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அதையும் தாண்டிய அற்புதக் கலைதான் யோகா.
மனதின் ஆலயம் உடல் என்றால், அந்த ஆலயத்தை அழகுறச் செய்வது யோகாதான்.
அதனால்தான், உடல் ஆரோக்கியத்துக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) யோகா என்று நான் கூறுகிறேன்.
இன்று உலக மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகின்றனர். போர்கள், பிரச்னைகளில் இருந்து மட்டுமின்றி மன அழுத்தத்திலிருந்தும் அமைதி பெறுவதற்கு மக்களுக்கு யோகப் பயிற்சி உதவுகிறது. யோகா என்பது புது யுகத்தை உருவாக்கி, மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக் கூடியது. இதைக் கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தை உருவாக்கியது.
நமது கலாசாரம் பெண்களை மையப்படுத்தி உருவானது. பெண்களை கடவுளின் அம்சங்களாக உருவாக்கி அவர்களை நாம் வணங்கி வருகிறோம். நமது பாரம்பரியத்தில் பல பெண்கள் சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளனர். மனித குலத்தின் முன்னேற்றம் என்பது பெண்கள் முன்னேறாமல் முழுமை அடையாது. ஆனால், பெண்கள் முன்னேற்றம் என்பதல்ல, பெண்களின் தலைமையில் மனித குல முன்னேற்றம் என்பதே சரியாக இருக்கும்.
இந்தியாவில் பெண்கள் கடவுளின் மறுஉருவம் என்றே கூறுகிறோம். ஆனால், ஆண்கள் நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே, தெய்வீக நிலையை அடைய முடியும் என்று கூறுகிறோம்.
நமது மனது எப்போதும் புதிய எண்ணங்களை வரவேற்பதாக இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக நம்மில் சிலர், பழைமையானது என்பதற்காகவே நமது கொள்கைகளை மறுத்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் பல சாதாரண மனிதர்களையும் யோகிகளாக மாற்றியுள்ளார். கூலி வேலைக்குச் செல்பவர்கள் கூட தங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதற்கு சத்குரு ஒரு காரணமாக அமைந்துள்ளார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com