"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' தொடக்கம்

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற புதிய அரசியல் அமைப்பை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான வெள்ளிக்கிழமை (பிப்.24) தொடங்கி அதற்கான அறிவிப்பை தீபா வெளியிட்டார்.
'எம்ஜிஆர். அம்மா தீபா பேரவை'  கொடியுடன் தீபா.
'எம்ஜிஆர். அம்மா தீபா பேரவை' கொடியுடன் தீபா.

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற புதிய அரசியல் அமைப்பை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான வெள்ளிக்கிழமை (பிப்.24) தொடங்கி அதற்கான அறிவிப்பை தீபா வெளியிட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த அவருடைய அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 -இல் முக்கிய முடிவை அறிவிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆயிரக்கணக்கானதொண்டர்களுக்கு மத்தியில், புதிய அமைப்பைத் தொடங்கி அதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவம் பொறித்த கருப்பு சிவப்புக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சி அல்ல, அமைப்புதான்: தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் பொருளாளராக நான் செயல்படுவேன். இது கட்சியல்ல; அமைப்புதான். தற்போதைக்கு பேரவையாகச் செயல்படும்; பின்னர் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்.
இரட்டை இலையை மீட்பதே குறிக்கோள்: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நானே. எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை அவரிடத்திலிருந்து தொடங்குவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தமது பேரவையின் குறிக்கோள்.
ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் பாதையில் எங்களது செயல்பாடுகள் அமையும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஆசியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
ஜனநாயகம் படுகொலை: தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோக கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர். சசிகலா, அவருடைய குடும்பத்தினரைத் தவிர்த்து மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்?
எனது சகோதரர் தீபக் வியாழக்கிழமை வெளியிட்ட திடீர் அறிவிப்புகளின் பின்னணியில் ஏதோ தெளிவில்லாத நிலை உள்ளது. அவருடைய நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது.
மரியாதை நிமித்தம்: ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. பன்னீர்செல்வமும் நானும் தனித்தனியாக மக்கள் பணியாற்றி வருகிறோம். அரசியல், தேர்தலில் ஓ.பி.எஸ்-ஸýடன் இணைவது குறித்து முடிவு செய்யவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் கட்டுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றார் அவர்.
சந்தர்ப்பவாதம் அல்ல: மக்களுக்காக இதுவரை எந்தவித சமூகப் பணியையும் ஆற்றாத நீங்கள், குடும்பப் பின்னணியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் செய்வது சந்தர்ப்பவாதமாக அமையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, "மக்கள் பணி என்பது அவரவர்களாகவே கையிலே எடுத்துக்கொள்ளக்கூடாது; மக்கள் விரும்ப வேண்டும். அப்படி, தானாகவே மக்கள் பணியை கையில் எடுத்துக்கொண்டவர்தான் சசிகலா. மக்களுக்காக சசிகலா இதுவரை என்ன பணியாற்றியிருக்கிறார் என அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். நானோ தமிழக மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்' எனப் பதிலளித்தார்.
அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்: ஜெயலலிதா பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தீபா இல்லத்தின் முன்பு பல்வேறு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் தீபா இல்லம் முன்பு குவிந்தனர். அப்போது தொண்டர்களிடையே தீபா பேசியதாவது:
ஜெயலலிதாவின் நல்லாசியுடன் வெள்ளிக்கிழமை (பிப்.24) முதல் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன். "மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற பாதையில் ஜெயலலிதாவின் வழியில் லட்சியப் பாதையை வகுத்து வெற்றி காண்போம் என்றார் தீபா.
ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி: முன்னதாக, மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு தீபா நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இல்லத்தின் முன்பு "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' அலுவலகம் தொடக்கம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கல் உள்பட பல்வேறு நலதிட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஆர்.கே.நகரில் போட்டி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என்று தீபா கூறினார். ஓபிஎஸ் அணியினர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நானும் போட்டியிடுவேன் என்றார் அவர்.
உள்ளாட்சி தேர்தலிலும் "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' சார்பில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com