கோவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்றனர்.
கோவையை அடுத்த ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி - சிவன் சிலை திறப்பு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் இருந்து பிற்பகல் 3.05 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்டார்.
இந்த விமானம், மாலை 5.33 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
அப்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பாஜக தேசியச் செயலர் முரளிதர் ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், டிஜிபி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், காவல் ஆணையர் அ.அமல்ராஜ் மற்றும் பாஜக முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் மாலை 5.55 மணி அளவில் புறப்பட்ட பிரதமர் மோடி, 6.10 மணி அளவில் ஈஷா யோக மையத்தைச் சென்றடைந்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், இரவு 8 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, 8.25 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர், இரவு 9.30 மணி அளவில் தனி விமானம் மூலம் புதுதில்லிக்குப் புறப்பட்டார்.