சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வியாழக்கிழமை இரவு டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சேலம், பள்ளப்பட்டி சாமிநாதபுரத்தில் உள்ள முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (65). நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர், தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மகன் முருகன் (37), மருமகன்கள் ரமேஷ் (40), சீனிவாசன் (37)ஆகியோருடன் தனது காரில் உளுந்தூர்பேட்டைக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, இரவில் சேலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காரை நடராஜனின் மகன் முருகன் ஓட்டி வந்துள்ளார். கார், வாழப்பாடி அருகேயுள்ள வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில் குறுக்குச் சாலையில் திரும்பியபோது, எதிரே வாழப்பாடியில் இருந்து ஹாலோ பிரிக்ஸ் மற்றும் சிமெண்ட் மூட்டைளை ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நடராஜன், அவரது மகன் முருகன், மருமகன்கள் ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில், டிராக்டர் ஓட்டுநர் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த தனபால் (45) உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.