மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை சார்பில் நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 17 குழுக்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி ஆகிய நடனங்கள் இடம்பெறவுள்ளன.
இவற்றில் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், குருவாயூர் ஆகிய பகுதிகளிலிருந்தும், துபை, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா உள்பட பல வெளிநாடுகளிலிருந்தும் ஏறத்தாழ 600 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். தவிர, தஞ்சாவூர், பிற மாவட்டங்களில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.