ஈஷா யோக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவையை அடுத்த ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகியின் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஈஷா யோக மைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று 5 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா,பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட அக்கட்சியினர் வரவேற்றனர்.
இதன் பின்னர் கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஈஷா யோக மையம் சென்றடைந்தார்.அத்வானியுடன், அவரது மகள், குடும்ப மருத்துவர், நண்பர், பாது காவலர் உள்ளிட்ட 5 பேர் கோவை வந்தனர்.
இதனிடையே, அத்வானியின் வருகையை ஒட்டி இன்று காலை முதலே அவிநாசி சாலை,திருச்சி சாலை, பேரூர் சாலை, ஆலாந்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.