பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி, வலை, மீன்கள் மற்றும் உபகரணங்களை பறித்துச் சென்றனர்.
கோடியக்கரை பகுதியில் கரை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள்.
கோடியக்கரை பகுதியில் கரை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி, வலை, மீன்கள் மற்றும் உபகரணங்களை பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி பருவ காலத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு தாற்காலிகமாக தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோடியக்கரையிலிருந்து முறையே பிப். 19, 20 ஆகிய தேதிகளில் இரண்டு வல்லம் படகுகளில் கடலுக்கு சென்ற பாம்பன் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீது, இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினராம்.
பிப். 19 ஆம் தேதி கடலுக்கு சென்ற ச. பெனிட்டோ (45) என்பவருக்குச் சொந்தமான வல்லம் படகில், அவரது மகன்கள் இன்னாசி (23), ஜான்சன் (21), அந்தோனிராஜ் (20), அதே பகுதியைச் சேர்ந்த அ. சேவியர் (40), செ. கார்மேகம் (28), கா. ராசேந்திரன் (28), ராம்நாடு மு. பூமிநாதன் (30) ஆகியோர் இருந்துள்ளனர்.
இதேபோல், பிப். 20ஆம் தேதி சென்ற பாம்பன் சி. ரூபன் (40) என்பவருக்குச் சொந்தமான மற்றொரு படகில், பாம்பன் பகுதி த. டென்னி (26), மு. அய்யப்பன் (35), தங்கச்சிமடம் லூ. ரீகன் (42), ரா. முனுசாமி (42), ந. கார்த்திக் (25), கு. முனிஸ்வரன் (18), ஜெ. சேகரன் (45) ஆகிய 7 பேர் இருந்துள்ளனர்.
இவ்விரு படகுகளில் சென்ற மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு 10 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கருதப்படும் 25 பேர், முதலில் ரூபனுக்குச் சொந்தமான படகில் ஏறி, மீனவர்களை தாக்கியதோடு, அச்சுறுத்தினராம். இதில் டென்னி, ரீகன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, 7 கட்டு வலைகள், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்துச் சென்றனராம். இதேபோல், பெனிட்டோவுக்குச் சொந்தமான படகை 5 படகுகளில் வந்த 15 இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தினராம். இதில், பூமிநாதன், ராசேந்திரன் இருவரும் காயமடைந்தனர். மேலும், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வலைகள், 6 கை விளக்குகள் (டார்ச் லைட்) உள்ளிட்ட உபகரணங்களை பறித்துச் சென்றனராம்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலை கோடியக்கரையில் கரை சேர்ந்தனர். இவர்களிடம் தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com