புறநகர் பகுதியில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்தவர்களில் 3 பேர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் மின்கம்பத்தில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மின்சார ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. மேலும் சென்னை -செங்கல்பட்டு மற்றும் சென்னை -அரக்கோணம் வழித்தடங்களில் புதிய பாதைகள் அமைக்கப்படவில்லை. இதனால் மின்சார ரயில்களில் அளவுக்கு அதிகமாக மக்கள் பயணம் செய்ய நேர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் மின்சார ரயில் பெட்டிகளில் கதவுகள் இருந்தாலும் அவை மூடப்படுவதில்லை. எனவே, மின்சார ரயில் பணிகளுக்கு நிகழும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு, கூடுதல் பாதைகள் அமைத்தல், அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குதல், தானியங்கி கதவுகளைப் பொருத்துதல் ஆகிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மேலும், படியில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.