முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைத்தளங்களில் நான் இல்லை என சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் கருணாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாடானை நான்கு முக்கு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் வெள்ளிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: என் தொகுதி மக்களைப் பற்றி, நான் குறை கூறியதாக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பி வருகின்றனர். அவற்றுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னைப் பற்றியும் எனது குடும்பத்தார் பற்றியும் அவதூறு செய்கின்றனர். நான் சமூக வலைத்தளங்களான முகநூலிலோ, சுட்டுரையிலோ இல்லை என்றார்.
அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் ஆணிமுத்து, ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வ.து.ந.ஆனந்த் உள்ளிட்டோர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எதிர்ப்பு: முன்னதாக தொகுதிக்கு வந்த கருணாஸ், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், தொகுதி மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, சிலைக்கு மாலை அணிவிக்க கருணாஸþக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் மாலை அணிவிக்காமல் சட்டப்பேரவை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார்.