காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
”5912 கோடி ரூபாய் செலவில் காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. அணைக்கான அனுமதியை பெற மத்திய நீர் வள ஆணையத்தை அணுக கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
காவிரி பிரச்னை குறித்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது தன்னிச்சையானது. சக வடி நில மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல், அணைக்கட்டுக்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மேகதாதுவில் அணைகட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் அணை கட்டுவதற்கான தொழில்நுட்ப அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது.” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.