வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களை மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த லோகு தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் ஏராளமான உணவகங்களில் வாகனங்களை நிறுத்த இட வசதிகள் இல்லை. சாலையில் நிறுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உயர்நீதிமன்றம் அருகே பூக்கடை, என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகனங்கள் நிறுத்தும் வசதியில்லாத உணவகங்களை மூடுமாறு, சென்னை மாநகராட்சிக்கு பிப்ரவரி 10-இல் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை வெள்ளிக்கிழமை விசாரிக்கத் தொடங்கியது.
அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், "சென்னை மாநகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400 முதல் 500 சதுர அடியில் இயங்கிவரும் சிறு உணவகங்களைச் சார்ந்து ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, வாகன வசதியில்லாத சிறு உணவகங்களை இயங்க அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். சாலையோரங்களில் இயங்கும் சிறு உணவகங்களில் வாகன நிறுத்தும் வசதி கட்டாயம் என்பதில்லை என்றார்.
இதை மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள், "வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்றனர்.