மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
இதுதொடர்பான மனுவை சென்னை தலைமைச் செயலகத்தில் அளித்த பின்னர், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. மறைந்தவரை தனிப்பட்ட முறையில், அரசியல் நிலையில் இருந்து விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விழா நடத்தி முதல்வர், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது சட்டப்படி, முறைப்படி தவறு.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்ற தலைமைச் செயலரே பங்கேற்று, அரசியல் சட்டத்துக்கு முரணாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது, அதைத் தட்டிக்கேட்காமல் இருந்து விட முடியாது.
முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவிப் பிரமாணம் எடுத்த நேரத்தில் செய்துகொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநரிடமும் புகார் தெரிவித்துள்ளோம்.
ஜெயலலிதா பெயரில் பல திட்டங்களைச் செயல்படுத்த நினைத்திருந்தால், அந்தப் பணிகளை தொடங்கி வைக்கும் நிலை நிச்சயமாக வரக் கூடாது. அதை உடனடியாக அரசு தடுத்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடும் அவசியம் ஏற்படும். இதுதொடர்பாக பொதுமக்களும் பிரச்னைகளை கிளப்பி வரும் நிலையில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைத் தலைவர் பி.தனபால் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்றார்.
எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.