ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் பிப்ரவரி 28-இல் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், காரைக்கால் பகுதிகளில் 6,000 அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுத்திடும் மத்திய அரசின் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு விடும்.
5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் திட்டம் குறித்து எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையான முறையில் அனுமதி அளித்துள்ள மத்திய அரசை மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.