தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஆழ்துளைக் கிணறு வறண்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த மேல்சந்திராபுரத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (60). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவர் நடவு செய்த பயிர்கள் வறட்சியால் பாதிப்படைவதை உணர்ந்து, தன் நிலத்தில் 2 இடங்களில் அண்மையில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தார். இதற்காக அவர் கடன் வாங்கி செலவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், 2 ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வராமல் போனது. இதனால் அவர் மிகவும் வேதனை அடைந்து விரக்தியுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நிலத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே, குடும்பத்தார் அவரைத் தேடிச் சென்ற போது, பூச்சி மருந்துக் குடித்து மயங்கிய நிலையில் பெரியசாமி கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெரியசாமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதே பெரியசாமி உயிரிழந்துள்ளார். பயிர்கள் காய்ந்த வேதனையால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.