கோவையில் மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலர்கள் கூட்டம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.
புது சித்தாபுதூரில் உள்ள அக்கட்சியின் அரசியல் ஆய்வு மையக் குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலர் வைகோ, பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி, உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் புலவர் செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கோவை மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்டச் செயலர் குகன் மில் செந்தில், மதுரை பூமிநாதன், சென்னை ஜீவன், திருச்சி சோமு, உதயகுமார்
உள்ளிட்ட 60 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இரு கூட்டங்களிலும் தமிழகத்தின் தற்கால அரசியல் சூழல், இதையொட்டிய மதிமுகவின் நிலைப்பாடு, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, சிங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.