திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மற்றும் நல்லமநாயக்கன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 80 வீரர்கள் காயமடைந்தனர்.
அய்யம்பாளையம் கோனார் தெருவில் நடைபெற்ற 62 ஆவது ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக 219 காளைகள் அழைத்து வரப்பட்டன. பரிசோதனை மேற்கொண்டதில் 5 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து 214 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றைப் பிடிக்க 300 வீரர்கள் திரண்டிருந்தனர். அப்போது காளைகள் முட்டியதில் 48 வீரர்கள் காயமடைந்தனர். அதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக் காசு, எல்இடி டிவி, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
நல்லமநாயக்கன்பட்டி: இங்குள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய பெருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு 227 காளைகள் அழைத்து வரப்பட்டன.
கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையின் போது ஒரு காளைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவிழ்த்து விடப்பட்ட மற்ற காளைகளை 246 வீரர்கள் பிடிக்க முயன்றனர். இதில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தாற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிடிபடாத காளைகளுக்கும், காளைகளைப் பிடித்த வீரர்களுக்கும் ரொக்கப்பணம், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.