மறைந்த ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செ ல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-அரசு அலுவலகங்கள் இருந்து ஜெயலலிதாவின் படத்தை அகற்றாவிட்டால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த தலைவரை விமர்சிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் நாகரிகமற்ற முறையில் தொடர்ந்து ஜெயலலிதாவை விமர்சித்து வருகிறார்.
அவரை காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
இதற்கு முன்பு மக்கள் மனதிலே நீக்கமற நிறைந்திருக்கும் காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, எம்ஜிஆர் போன்றோரையும் நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்தவர்கள்தான் திமுகவினர் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஜெயலலிதாவின் படத்தை அகற்ற முயன்றால், தமிழகத் தாய்மார்கள் ஆவேசமாக பொங்கி எழுவர். உங்களை (ஸ்டாலினை) மன்னிக்கவே மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.