மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு பேசும் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24-ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கொலைக் குற்றவாளி ஜெயலலிதா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். பகைவருக்கும் உதவும் குணம் படைத்த ஜெயலலிதா மீது உண்மைக்கு மாறான கடுஞ்சொற்களால் ஸ்டாலின் விமர்சித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மக்களின் மனதில் ஜெ.: காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள், ஏழை தொழிலாளர்களின் உடைமையாகிய என்.எல்.சி., பங்கு விவகாரம் போன்ற எண்ணில்லா உரிமை மீட்புப் பிரச்னைகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். அவர் வழங்கிய விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இவற்றால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்குத் தங்கம், பசுமை வீடுகள் என்றெல்லாம் அவரின் பார் வியக்கும் திட்டங்களால் அன்றாடம் பயனடையும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் மனித தெய்வமாகவே ஜெயலலிதா வாழ்ந்து வருகிறார். அதனால், அவரின் நினைவாக திட்டங்களுக்குப் பெயர் சூட்டித்தான் ஜெயலலிதாவை நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும்.
ஜெயலலிதாவை கொலைக் குற்றவாளி என்று அவதூறு பேசிய ஸ்டாலின், தான் பயன்படுத்திய வார்த்தையை திரும்பப் பெறுவதுடன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.