ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சனிக்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் வாகனம் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் கருணாஸ் வெள்ளிக்கிழமை அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது தீபா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மாலை அணிவிக்காமல் திரும்பினார். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக இருந்தது.
இதை அறிந்த தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அரசூர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் பலர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டனர். தகவலறிந்த திருவாடானை போலீஸார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த நடிகர் கருணாஸ் வாகனம் மீது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் காலணிகளை வீசி எறிந்தனர். இதுகுறித்து கருணாஸ் திருவாடானை போலீஸில் புகார் அளித்தார். பின்னர் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இச்சமயத்தில் அங்கிருந்த ஒருதரப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசினராம். இதனால் நடிகர் கருணாஸ் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.