நாகப்பட்டினம் மீனவர்களைத் தாக்கியவர்களைக் கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் மீனவர்களைத் தாக்கி, மீன்பிடிச் சாதனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தமிழக அரசு கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ.8 லட்சம் நஷ்டத்தையும் பெற்றுத்தர வேண்டும்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் உடனே கரை திரும்பியுள்ளனர்.
எனவே, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.