சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பரபரப்பு நிகழ்வுகளும் சிக்கல்களும் நடந்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதிமுகவின் சட்டவிதிகளின்படி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சொல்லி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது உரிய பதிலை பிப்.28-ஆம் தேதிக்குள் (செவ்வாய்கிழமை) அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் தற்போது டி.டி.வி.தினகரன் ஈடுபட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது.
இதற்கான வேலை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முதல் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களை இன்று சென்னைக்கு வருமாறு திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இன்று சென்னை வருவார்கள் என்று தெரிகிறது. திடீர் அழைக்கப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.
மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு போயஸ் கார்டன் இல்லத்திலேயே டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.