அதிமுகவை ஓபிஎஸ், அழிக்க முயற்சிப்பதாக பூந்தமல்லி எம்எல்ஏ தண்ணீர்குளம் ஏழுமலை குற்றம்சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், திரூர் பகுதி அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திரூர் பகுதி நிர்வாகி குணசேகரன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ஜெயபால், செல்வகுமாரி அண்ணாதுரை, சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பூந்தமல்லி எம்எல்ஏ தண்ணீர்குளம் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி, பேசியதாவது:
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஆயுள் முழுவதும் நல உதவிகள் வழங்கி, கொண்டாடுவோம். ஏனென்றால் நாங்கள் எல்லாம் ஜெயலலிதா மூலம் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அந்த நன்றியை மறக்காதவர்கள். ஆனால், பலர் நன்றியை மறந்து, ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை அழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் முதல்வராக இருந்தவரை தான், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார். பதவியிலிருந்து விலகியவுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
ஜெயலலிதா மீதான தீர்ப்புக்கு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார். இதிலிருந்தே அவரது விசுவாசம் மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.