தஞ்சாவூர்: மாணவர்கள் இந்தியாவின் பொறுப்புமிக்க குடிமகன்கள் என்றார் நிதி ஆயோக் உறுப்பினர் பிபெக் டெப்ராய்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது சோ எஸ். ராமசாமி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
இன்றைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் இந்தியாவின் பொறுப்புமிக்கவர்கள் என்பதால், 2035-ல் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் விதமாக பாதுகாப்பு, பொதுக் கொள்கையில் பங்கு கொண்டு சிறந்த குடிமக்களாகத் திகழுவர் என நம்புகிறோம்.
விசாலமான கருத்துகளையும், அரசியலமைப்பில் அரசு - குடிமகன் இடையே உள்ள இணைப்பைப் புரிந்து கொள்ளும் விதமாகப் பொதுக் கொள்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பு வரலாற்றையும், இந்திய அரசியலமைப்பில் சமத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி நோக்கத்தையும் ஆராய வேண்டும்.
அரசியலமைப்பு அமலாக்கத்தின் முக்கியத்துவத்தையும், இந்திய சமூகத்தின் கள யதார்த்தங்களையும் அறிய வேண்டும். முந்தைய காலத்தில் இருந்த பாதுகாப்பு, ராணுவம், சட்ட விதிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சமூக உள்கட்டமைப்பில் அரசின் தலையீட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது மாவட்ட அரசிதழில் உள்ள தகவல்களை அறிந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். வணிகத்துக்கு இடர்பாடாக உள்ள தேவையற்ற சட்டங்களைக் கொண்டு வந்து தேசிய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றார்.