திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

திருச்செந்தூர் அருகே கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

திருச்செந்தூர் அருகே கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள படுக்கப்பத்து அருகேயுள்ள அழகம்மன்புரம் கிராமத்தில் உள்ள அழகம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுற்றுலா சென்றனர்.
அங்கு கடலில் படகு சவாரி செல்ல முடிவெடுத்த அவர்கள், மீன்பிடி விசைப்படகில் ஏறிக்கொண்டனர். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவு சென்றபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தடுமாறி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தோர் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து கடற்கரையிலிருந்து வேறு ஒரு படகில் சிலர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 19 பேரும் குலேசகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருச்செந்தூர் தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன் மகன் ஜெயராமன் (42), ஆறுமுககொடி மகன் சுந்தரேஸ்வரன் (7), வரதராஜன் மகன் சுரேந்திரன் (10) ஆகிய மூவரும், குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் கணேசன் மகள் முத்துலட்சுமி (20), சுந்தர்ராஜ் மகன் ஆகாஷ் (9) ஆகிய இருவரும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 பேரில் ஜெயராமன் மனைவி முத்துசெல்வி, கார்த்திகேயன் மனைவி சுகன்யா (25), ஆறுமுககொடி மனைவி உஷாராணி (35), சுந்தர்ராஜ் மனைவி முருகேஸ்வரி ஆகிய 4 பெண்களும் இறந்தனர்.
மேலும், விபத்தில் மீட்கப்பட்ட மற்ற 10 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆட்சியர், எம்எல்ஏ ஆறுதல்: இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன?
படகில் அளவுக்கு அதிகமாக சுமார் 20 பேர் ஏறியுள்ளனர். படகில் ஒரு பகுதியில் மீன்பிடி வலைகள் வைக்கப்பட்டிருந்தனவாம். இதனால், இவர்கள் அனைவரும் படகின் மற்றொரு பகுதியில் நின்றுள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையால், படகின் சுமை ஒருபக்கமாக அதிகரித்து கவிழ்ந்துள்ளது.

5 பேரை மீட்டார்; மனைவியை இழந்தார்
விபத்தில் பலியானவர்களில் சுகன்யா மட்டும்தான் திருச்சியைச் சேர்ந்தவர்.சுகன்யாவின் கணவர் கார்த்திகேயன் ஆகியோர் அழகம்மன்புரம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் விழாவுக்குதான் வந்திருந்தனர். படகு விபத்துக்குள்ளானதும் கடலில் தத்தளித்த 5 பேரை மீட்க கார்த்திகேயன் உதவி செய்துள்ளார். ஆனால், அவரது மனைவி சுகன்யா இறந்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com