திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில் படகு விபத்தில் 9 பேர் உயிரிழந்தற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூர் அருகே நடந்த படகு விபத்தில் 9 பேர் இறந்தனர். இந்தச் செய்தியை அறிந்து நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 11 பேருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், இப்படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.