புதுதில்லி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது என மத்திய பெட்ரோலியத் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினசரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது. மிக குறைந்த நிலப்பரப்பில்தான் திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டம் செயலப்படுத்தபடுவதன் மூலம் தமிழக அரசுக்கு ராயல்டி தொகையாக ரூ.40 கோடி கிடைக்கும்.அத்துடன் இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு திட்டங்கள் மூலம் விவசாயத்திற்கு எந்த விதமான் பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.