தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், மாநிலத்துக்கு கூடுதலாக 85 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பிரதமரை திங்கள்கிழமை சந்தித்து அவர் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, உரிய முறையில் அமல்படுத்துவதற்காக தமிழகத்துக்கு கூடுதலாக மாதந்தோறும் 85,000 மெட்ரிக் டன் அரிசி சலுகை விலையில் வழங்க வேண்டும்; 14-ஆவது நிதிக் குழு பரிந்துரையில் தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஈடு செய்ய வேண்டும்; கடல் நிரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த ஏதுவாக கடலோர ஒழுங்குறை பகுதிக்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
தமிழகத்தில் ’பாரத் நெட்' திட்டத்தை தமிழக அரசு நிறுவனம் மூலம் செயல்படுத்த உரிய அனுமதியை வழங்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும். தமிழக அரசின் உள்கட்டமைப்பு நிதியத்துக்கு தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியை (என்ஐஎஃப்) வழங்க மத்திய நிதியமைச்சசகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் 3,4-ஆவது அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்; செய்யூரில் நிறுவப்படவுள்ள மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய எரிசக்தித் துறைக்கு தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றார் முதல்வர் பழனிசாமி.