அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: பதவியேற்று 5 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மாற்ற வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இப்போதைக்கு மாற்ற மாட்டார்கள்.
விரைவில் நிர்வாகிகள் மாற்றம்: நிர்வாகிகள் சிலரை மாற்றுவது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம் பேசி விட்டு வந்துள்ளேன். விரைவில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்.
சோனியாவிடம் ஸ்டாலின் புகாரா? காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுலைப் பார்க்க தில்லியில் அவர்களது வீட்டுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை வரவேற்று அழைத்துச் சென்றேன்.
ஆனால், ஸ்டாலின் என்னை (திருநாவுக்கரசர்) பற்றி புகார் கூறினார் என்று செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை என்றார்.