’உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பு

சிதம்பரம், நெய்வேலியில் தேமுதிகவின் சார்பில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கும் ’உங்களுடன் நான்' நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜயகாந்த்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜயகாந்த்.

சிதம்பரம், நெய்வேலியில் தேமுதிகவின் சார்பில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கும் ’உங்களுடன் நான்' நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் காசிமடத் தெருவில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பகல் 11 மணி முதல் 2 மணி வரை ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தினருடன் பங்கேற்று விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, மாவட்ட அவைத் தலைவர் ஆர்.பாலு, கடலூர் மாவட்டச் செயலர் சபா.சசிக்குமார், பெரம்பலூர் மாவட்டச் செயலர் துரை.காமராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தமிழரசன், நகரச் செயலர் சி.க.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெய்வேலியில்...: பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ’உங்களுடன் நான்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மாலை 4.40 மணியளவில் விஜயகாந்த் மண்டபத்துக்கு வந்ததும், வரிசையில் காத்திருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தடுப்புகளை மீறி தொண்டர்கள் உள்ளே நுழைந்ததால், மண்டபமே போர்க்களமானது. இதனைத் தொடர்ந்து, விஜயகாந்து மணமகன் அறையில் தஞ்சம் புகுந்தார்.
தகவலறிந்து வந்த போலீஸாரும், கட்சி நிர்வாகிகளும் நீண்ட நேரம் போராடி நிலைமையைக் கட்டுக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர், பலத்த பாதுகாப்புடன் தொண்டர்கள் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்டச் செயலர் பி.சிவக்கொழுந்து செய்திருந்தார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம். துணைச் செயலர்கள் பாலமுருகன், பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணிச் செயலர் கலியபெருமாள், மாணவரணிச் செயலர் வசந்த், தொழிற்சங்கம் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com