உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31 -க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.
ஆனால், உத்தேச தேதியை கூறாமல், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சரியான தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என அதில் கோரியுள்ளது. இந்த கேவியட் மனுவை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்தார்.