நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளின் விடியோ பதிவுகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளின் விடியோ பதிவுகளை சமர்ப்பிக்குமாறு பேரவைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளின் விடியோ பதிவுகளை சமர்ப்பிக்குமாறு பேரவைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சட்டப்பேரவை தலைவர், செயலாளர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்குரைஞர்கள் கே.பாலு, ரவி மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முக சுந்தரம், ’பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விடியோ பதிவுகளை அளிக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதுவரை அதற்கு எந்தவித பதிலும் பெறப்படவில்லை' என்றார்.
அதைத்தொடர்ந்து நடந்த அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு சட்டப்பேரவை தலைவர், செயலாளர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நாளன்று பேரவை நிகழ்வுகளின் இறுதிவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து விடியோ பதிவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com