நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெடுவாசலில் ஒன்றுகூடி போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய பாஜக அரசோ மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது.
திட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் எதிர்ப்புக்கு இரையாக வேண்டிய நிலை ஏற்படும். நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
ராமதாஸ்: திட்டத்தைச் செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. இதற்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவும், எழுச்சியும் மத்திய, மாநில அரசுகளை பதற்றமடைய செய்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பொதுநலனுக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதுதான் நல்ல ஆட்சிக்கு அழகு.
அதைவிடுத்து அடக்குமுறைகளால் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ வழி செய்துவிடும். எனவே, திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.