திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு கடலில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்து இறந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டைக் கொடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: மணப்பாடு பகுதியில் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். கடலுக்குள் படகில் பயணம் செய்ய விரும்புவோர் மிகவும் பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசும் அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜி.கே.வாசன்: சொந்த லாபத்துக்காக பராமரிப்பு இல்லாமல், அரசின் உரிமம் பெறாமல் படகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வோர் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். படகு விபத்தில் பலியானோருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
அன்புமணி: படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இனிவரும் காலங்களிலாவது விபத்துகளைத் தடுக்கும் வகையில் அலைகள் அதிகமுள்ள, தடை செய்யப்பட்ட கடல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் ஏற்றிச் செல்லாதவாறு கண்காணிப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.