சென்னை தாம்பரம் விமானப்படை விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) சென்னை வருகிறார்.
இதுகுறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்ஷல் எஸ்.ஆர்.கே.நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கொச்சியில் மார்ச் 2 ஆம் தேதி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து மார்ச் 3-ந்தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர், தாம்பரம் விமானப்படை விழாவில் கலந்துகொள்கிறார்
விமானப் படை விழாவில், 125-ஆவது ஹெலிகாப்டர் படைப்பிரிவு, மெக்கானிக்கல் பயிற்சி பிரிவு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்குகிறார். விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் விமானப் படையின் நவீன வசதிகள் காட்சிப்படுத்தப்படும். எம்ஐ-17, எம்ஜ 35 ரக ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பில் இடம் பெறும். அத்துடன், ஹெலிகாப்டர் சாகசமும் நடைபெற உள்ளது. மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்களும் வான் சாகசத்தில் ஈடுபட உள்ளன. இந்த விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தானோ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் அவர்.