ரூ.2 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது

மதுரையில் ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிக்குமார்.

மதுரையில் ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி கனகா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பழனிக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்த கனகாவுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த ரெபேக்கல் (52) என்பவர் கனகாவிடம் குழந்தையை விற்பனை செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினாராம். இதனை நம்பிய கனகா, அவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அவர், அவனியாபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (35), சுரேஷ் (42), இந்திராணி (45) ஆகியோர் மூலம் புதுக்கோட்டையை அடுத்த மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த மணி (33) என்பவரிடம் குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், மனம் மாறிய கனகா தனது குழந்தையை திரும்பத் தரும்படி கேட்டாராம். அவர்கள் தர மறுத்ததால், அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ரெபேக்கல் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1,25,020 மற்றும் 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com