புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கறம்பக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவளித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், துணைச் செயலர் சி. மகேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, குணசேகரன், பாமக தலைவர் கோ.க. மணி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், சமக தலைவர் ஆர். சரத்குமார், திரைப்பட இயக்குனர்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜ், நாம் தமிழர் இயக்க நிர்வாகி சீமான் உள்ளிட்ட பலரும் நெடுவாசல் கிராமத்துக்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்துச் சென்றனர்.
இந்நிலையில், கறம்பக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.