இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்கக் கட்டிகளை ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து ராமேசுவரம் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அதிகாரிகள் சனிக்கிழமை நள்ளிரவு ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். உச்சிப்புளி ரயில்வே கடவு பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில் தலா 100 கிராம் எடையுள்ள 87 தங்கக் கட்டிகள் (8.7 கிலோ) இருப்பது தெரியவந்தது.
24 காரட் சுத்தத் தங்கமாக இருந்த அந்த தங்கக் கட்டிகளையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓட்டுரிடம் விசாரணை செய்த போது, அவரது பெயர் முஜிபுர் ரகுமான் (31) என்பது மட்டும் தெரிய வந்தது.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், தங்கக் கட்டிகளை யார் கொடுத்து அனுப்பியது, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் இந்த தங்கம் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.