ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள் விவரம்:
ஆளுநர் வித்யாசாகர் ராவ்: பிறக்கும் இந்தப் புத்தாண்டில் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்வதுடன், இந்தியாவை உலகின் மிகச் சிறந்த நாடாக மாற்றி முற்போக்கான எதிர்காலத்துக்கு திட்டமிடுவோம். பிறக்கும் இந்தப் புத்தாண்டை திறந்த இதயத்துடனும், மனத்துடனும் வரவேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்பதும்தான் தனது அரசின் குறிக்கோள் என சூளுரைத்தார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
அவரது கனவை நனவாக்கிட, அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு அவர் வகுத்த எண்ணற்ற திட்டங்களை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்களின் விருப்பங்கள், தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஒற்றுமையுடன் அயராது உழைத்து, வளமும், வலிமையும் மிக்க தமிழகத்தை உருவாக்கிட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.