பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (48). இவரது மனைவி ஜெயலட்சுமி (38). மனைவியின் நடத்தையில் சின்னசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சின்னசாமி, ஜெயலட்சுமியை வெட்டிக்கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து சின்னசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், சின்னசாமிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், தொகை கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, சின்னசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.