சென்னை 40-ஆவது புத்தகக் கண்காட்சியில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம் தனது அரங்கை மீண்டும் அமைத்துள்ளது. தமிழ் தாத்தா உ.வே.சா. கண்டெடுத்த தமிழ் பொக்கிஷங்களான அரிய ஓலைச் சுவடிகளை பாதுகாக்க டாக்டர் உ.வே.சா. பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த நூல் நிலையம் சார்பில் தமிழ் தாத்தா எழுதிய நூல்கள் மற்றும் சங்க இலக்கியம் தொடர்பான நூல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்து விற்பனை செய்து வந்தது இந்த நிலையம்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த நூல் நிலையம் அரங்கை அமைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது அரங்கை அமைத்துள்ளது டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம். வழக்கம் போல பல சங்ககால இலக்கிய நூல்கள், அவற்றின் ஆய்வுரைகள் போன்றவையும், தமிழ் தாத்தா எழுதிய அவரது வாழ்க்கை வரலாறான என் சரித்திரம் நூலும், அவரது குருநாதரைப் பற்றி எழுதிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் மற்றும் பிற நூல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளது இந்த நூல் நிலையம்.
சங்ககால தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களின் முதல் தேர்வாக உள்ளது டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்.