சென்னை: ஜல்லிக்கட்டை எதிர்க்கும் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 'பீட்டா' அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த எதிர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த 'பீட்டா' அமைப்புக்கு நடிகை திரிஷா ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
எதிர்ப்பின் காரணமாக சிவகங்கை பகுதியில் நேற்று நடந்த திரிஷாவின் 'கர்ஜனை' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு நடிகர் கருணாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'பீட்டா' அமைப்புக்கு ஆதரவளிக்கும் நடிகை த்ரிஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். அவர் இவ்வாறு தொடர்ந்தால் அவரது படப்பிடிப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்துவோம். நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த ஆண்டில் உச்ச நீதிமன்ற அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கருணாஸ் த்ரிஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.