கிருஷ்ணகிரி: கட்சியின் எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2011-இல் அதிமுக சார்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதா அமைச்சரவையில் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.பி.முனுசாமி.பின்னர் இவர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எல்லோரும் எளிதில் அணுகக்கூடியவராக அவர் உள்ளார்.
அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது கட்சியின் எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். மேலும் கட்சியின் சின்னத்தையும், கொடியையும் தாங்களே கைப்பற்றியவர்கள் போல பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்ற பின்பு அவருக்கு எதிராக எழும் முதல் எதிர்ப்புக் குரல் முனுசாமியினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.