பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அநீதி இழைத்து விட்டது என்று புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேர, சோழர் காலத்திலிருந்தே ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. அப்படிப்பட்ட இந்த விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கத் தவறியது வருத்தமளிக்கிறது. தென்மாநிலங்களுக்கு ஒரு நீதி என்றும், கர்நாடகத்துக்கு மட்டும் ஒரு நீதி என்றும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. பிரதமர் மோடி நினைத்திருந்தால் அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த வழிவகுத்திருக்கலாம். தமிழர்களின் உணர்வுகளை அவர் மதிக்கத் தவறிவிட்டார் என்றார் நாராயணசாமி. அவருடன், மாநில விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் ஜி.கே. முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.