போராடியவர்கள் மீது தடியடியா? காவல் துறைக்கு தலைவர்கள் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, போராடியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராடியவர்கள் மீது தடியடியா? காவல் துறைக்கு தலைவர்கள் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, போராடியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவராதது, தமிழக அரசின் அலட்சியம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைபட்டுவிட்டது. போலீஸாரின் கைது, தடியடி என அரசின் பல்வேறு நெருக்கடிகளையும் போராட்டக்காரர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுக அரசு பதவியில் நீடிப்பதற்காகவும், அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித் துறை, சிபிஐ நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக மக்கள் வெகு காலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்துக்கு என்றைக்கும் திமுக துணை நிற்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத் துறையினர், இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியுள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பிற பகுதிகளிலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். தடியடி நடத்த ஆணையிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்: அவனியாபுரத்தில் பொதுமக்களை காவல்துறையினர் மிகக் கடுமையாகத் தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டவர்களை அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வமாக தாற்காலிக தடை இருந்தாலும், உணர்வுபூர்வமாக யாராலும் தடை விதிக்க முடியாது. பல இடங்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் மக்கள் பேராதரவுடன் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், தடையை மீறுவோர் மீது தடியடி நடத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com