சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போது தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தற்பொழுது ஜலல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூன்று நாட்களாக போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டங்கள் தொடர்பான விஷயங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு வழக்கறிஞர் பாலு கொண்டு வந்தார்.
அப்பொழுது அவர், 'மெரினா கடற்கரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் இருந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் போராட்டக்காரர்களுக்கு குடிநீர் கூட வழங்கப்படாதது உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துக் கூறினார்.
ஆனால் நீதிபதிகளின் அமர்வானது தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலிருப்பதால் இதில் தற்போது தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டது.