மத்திய அரசு மீதான புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் புகார்கள் ஆதாரமற்றவை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பா.ஜ.க.வை தாக்கிப் பேசியிருக்கிறார் நடராஜன்.
ஆவியைப் பார்த்து பயப்படுவதை போலவே காவியைப் பார்த்து பயப்படுவதாக எண்ணி காவி மயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார். அவரது பேச்சு கண்டனத்துக்குரியது.
அ.தி.மு.க.வை உடைக்கப் பார்க்கிறது, குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. பா.ஜ.கவை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.
எந்த விதத்தில் நாங்கள் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லட்டும்.
தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதேபோல தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியடைய வேண்டும் என்பதிலும், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால் இன்னொரு கட்சியில் பிளவை ஏற்படுத்தி வளர்வதற்கான அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.