ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 முதல் ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளன.
60 சதவீத ஏடிஎம்கள் நிரந்தரமாக மூடியுள்ளன. மற்றவற்றில் பணம் நிரப்பப்படும் போதிலும், எப்போது பணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால், எந்த ஏடிஎம்மில் கிடைக்கும் என்று மக்கள் தேடி அலையும் நிலைதான் நீடிக்கிறது.
இந்த நிலையில், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது சலுகை போன்று தோன்றினாலும் எந்த பயனுமில்லை.
வார உச்சவரம்பு ரூ.24 ஆயிரம் என்ற அளவிலிருந்து உயர்த்தப்படவில்லை. நடப்புக் கணக்குக்கான உச்சவரம்பு மட்டுமே ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பதற்கான வார உச்சவரம்பும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டால்தான் வாடிக்கையாளர்களுக்கு பயன் கிடைக்கும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 70 நாள்களாகிவிட்ட நிலையில், புதிய ரூ.500 தாள்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.