பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ள கேரள அரசுக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ: பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய 2 இடங்களில் தடுப்பு அணை கட்டும் பணிகளைத் தொடங்கியும், பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய 4 இடங்களிலும் தடுப்பு அணைகளை கட்டவும் கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கோவைக்கு சிறுவாணி தண்ணீர் வரவில்லை. பவானி தண்ணீர்தான் பில்லூர் திட்டத்தின் மூலம் குடிநீர் வருகிறது. புதிய தடுப்பு அணைகளால் பில்லூர் திட்டத்துக்கும் ஆபத்து வந்து விட்டது. ஆகவே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை கேரள அரசு கைவிட வேண்டும். கேரள அரசைக் கண்டித்தும், தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் கோவையில் ஜனவரி 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு, கடும் குடிநீர் பஞ்சம் நிலவும் சூழலில் 6 தடுப்பணைகளை கேரள அரசு கட்டுவது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.