ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கும்போது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதை வரவேற்கிறேன். முதல்வரின் இந்த தில்லிப் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் மாணவர்களும், இளைஞர்களும், அனைத்து கட்சியினரும் ஜல்லிக்கட்டு கோரி தீவிரமாக போராடுகிறார்கள். அவர்கள் தங்களது உணர்வுகளை உளப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மட்டுமே அனுப்பி, போராடுபவர்களுடன் பேசுவதை தவிர்த்து, முதல்வரே நேரில் சென்று இளைஞர்களையும், மாணவர்களையும் சந்திக்க வேண்டும்.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாணவர்கள், இளைஞர்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரநிதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தால், தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.